திருச்செந்தூர், பிப்.16: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (17ம் தேதி) முதல் 3 நாட்கள் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் நாளை (17ம் தேதி) மகளிர் குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசசாமி பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கடம்பூர்ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் மீண்டும் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 3ம் தேதி வருகை தந்து கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் நாளை (17ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணியளவில் வைகுண்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். அதன்பிறகு திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.