ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மேம்பாட்டு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்றவர்கள் தயார் செய்யப்பட்டு, அதில் பல லட்சம் மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு இருக்கும்.
இதனை சுற்றுலா பயனில் கண்டு ரசித்துச் செல்வார்கள். இதற்காக பூங்காக்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இம்முறையும் கடந்த சில மாதங்களாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் புதிதாக குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பூங்காவில் ஜேசிபி வாகனம் மூலம் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பூங்கா நடுவில் உள்ள குளத்தில் இசை நீரூற்று அமைப்பதற்கான குழாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் புதிதாக இசை நீரூற்றை கண்டு ரசிக்க வாய்ப்பு உள்ளது.
