வீரமலைகளம் பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மணப்பாறை, பிப்.12: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், எண்டபுளி ஊராட்சி மாங்கனாம்பட்டி வீரமலைகளம் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் சாலை வசதி மற்றும் குடிநீர் தேவைக்காக சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தங்கள் பகுதியினை எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் கவனம் தங்களது பகுதியின் மீது திரும்பும் வகையில் பாஜக விவசாய ஒன்றிய தலைவர் அழகர் பூசாரி தலைமையில் நேற்று அப்பகுதி மக்கள் எண்டபுளி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பஞ்சாயத்து கிளார்க் சுசிலா மற்றும் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி, கிராம மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: