லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் லோனி பகுதியில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் மேலாளர் அபிஷேக் குமார். இவர் பாட்னாவை சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காஜியாபாத்தில் மேலாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் வங்கியின் பாதுகாவலர் ரவீந்திர ஹூடாவுக்கு (50) மேலாளர் விடுப்பு தர மறுத்ததாக தெரிகின்றது. விடுப்பு மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்னைகளால் அதிருப்தி அடைந்த ரவீந்திர ஹூடா நேற்று முன்தினம் வங்கி மேலாளரின் அறைக்குள் சென்றுள்ளார். அங்கு அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ரத்தவெள்ளத்தில் சரிந்த அவரை வங்கியில் இருந்த ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாதுகாப்பு ஊழியர் ரவீந்திர ஹூடா மற்றும் அவருக்கு உதவிய சிசுபால் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாக வங்கி கிளையில் பணியாற்றி வரும் ரவீந்திரா ஹூடாவிற்கு சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், விடுப்பு கேட்டபோதெல்லாம் மேலாளர் மறுத்துவிட்டதாகவும் தெரிகின்றது. இது குறித்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மேலாளரை சுட்டுவிட்டதாக ஹூடா தெரிவித்துள்ளார்.
