சேலம், பிப்.12: சேலம் சீலநாயக்கன்பட்டியில் மாயமான பள்ளி மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் தாரிகா (14). ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, பாட்டியுடன் வீட்டில் இருந்த தாரிகா, மதியம் 11.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேச் சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் அவரின் தோழிகளின் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை. தாய் மஞ்சுவின் செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றிய புகாரின் பேரில், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவி தாரிகாவை தீவிரமாக தேடினர்.