திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், வரும் சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். மனநிறைவுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றி, 1300 முறை பேசியிருக்கிறேன். திமுக சமூக நீதிக்கான இயக்கம். கூட்டணி கட்சிகளுடன், சமூக நீதி கடைபிடிக்கப்படும். இத்தனை ஆண்டுகளில், எய்ம்ஸ் மருத்துவமனை 10 சதவீத வேலையை மட்டுமே செய்துள்ளார்கள். மற்ற மாநிலங்களில் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு மட்டும் ஓரவஞ்சனையாக ஒன்றிய அரசு செயல்படுகிறது.
விஜய் இப்போதுதான் அரசியலில் நுழைந்துள்ளார். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
கடந்த சில தினங்களாக உலகம் மற்றும் இந்திய நாட்டு மக்கள் அவதிக்குள்ளாகுவதற்கு மூலகாரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான். ஹிட்லர்தான் உலகை அழிப்பேன் என்று பேசினார். ஹிட்லர் மறுபிறவி எடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளார். அவர் அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர். மோடியும், அமித்ஷாவும், தங்களது தகுதிகளை இழந்து, திமுகவை அழிப்பேன் என்று பேசுகிறார்கள். எதிர்க்கட்சிகளை மிரட்டி அடியபணிய வைக்கும், பாஜகவிற்கு திமுக பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது. மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
