பொதுமக்கள் புகாரை தொடர்ந்து அதிரடி கழுகுமலை சார்பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

கழுகுமலை, மார்ச் 13: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலபஜார் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள், திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கழுகுமலை மட்டுமன்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள 36க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், விவசாயிகள் பதிவுப்பணிக்காக இங்கு வந்து செல்கின்றனர். தினமும் சராசரியாக 10க்கும் மேற்பட்ட ஆவணங்களும், சுபமுகூர்த்த தினத்தில் 30க்கும் மேற்பட்ட ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர் அனிதா, உதவி ஆய்வாளர் தளவாய் ஜம்புநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாண்டி, சுந்தரவேல் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று மாலை கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சார்பதிவாளர் செல்லப்பாண்டி மற்றும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 500 பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: