ஓமலூர் அருகே சோகம்: மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி

சேலம், பிப்.11: ஓமலூர் பக்கமுள்ள சிக்கனம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம்(28). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகன் ஸ்ரீகிருஷ்ணன்(2). தற்போது கலைவாணி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். நேற்று காலை, ஆறுமுகம் வேலைக்கு சென்றுவிட்டார். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வற்காக கலைவாணி, சரக்கப்பிள்ளையூரில்உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார். குழந்தை ஸ்ரீகிருஷ்ணனை, வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில், வீட்டில் பல்ப் மாட்டுவதற்கான ஹோல்டர் கீழே விழுந்து கிடந்தது. பல்ப் இல்லாத அந்த ஹோல்டர் சுவிட்ச் ஆப் ஆகாமல் இருந்துள்ளது. அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, ஹோல்டரில் கை வைத்துள்ளான். அதில் மின்சாரம் வந்து கொண்டிருந்ததால், குழந்தை தூக்கி வீசப்பட்டான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தை இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பெற்றோர் விரைந்து வந்து, குழந்தையை பார்த்து கதறி அழுதனர். பல்ப் ஹோல்டர் எப்படி கீழே விழுந்தது? பல்ப் இல்லாத நிலையில் அதில் எப்படி மின்சாரம் வந்தது? என்பது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: