விளாத்திகுளம், மார்ச் 10: குளத்தூர் அருகே அடிப்படை வசதியில்லாத வீட்டில் வசித்து வந்த அரசு பள்ளி மாணவிக்கு கலைஞர் கனவு இல்ல வீடு வழங்க மார்க்கண்டேயன் எம்எல்ஏ பரிந்துரை செய்துள்ளார். பனையூரை சேர்ந்தவர் அன்புராஜன் மகள் லதா, வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழும், தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று 11ம் வகுப்பு மாணவர்களுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குறள் மாணவர் மாநாடு-2026 பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவி லதா, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வறுமையின் காரணமாக போதிய வசதி இல்லாத ஆஸ்பெட்டாஸ் சீட் மற்றும் தகரம் கொண்டு கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருவதாகவும், மழை காலங்களில் வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விடுவதாகவும், கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்திட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டித்தர உதவும்படியும் கோரிக்கை விடுத்தார். மாணவியின் கோரிக்கையை கேட்டறிந்த மார்க்கண்டேயன் எம்எல்ஏ, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு வீடு கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவி லதாவின் தந்தை அன்புராஜனுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2026-27ம் ஆண்டு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் இந்நடவடிக்கை, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
