திருவாரூர், மார்ச் 9: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வாஞ்சியம் கிராமத்தில் வசித்து வருபவர் வீராசாமி மகன்பிரதாபன் (35) டிரைவரான இவருக்கும் இவரது மனைவி மகேஸ்வரி (32) என்பவருக்கு மிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் அதனை மகேஸ்வரியின் தாய் சாந்தி மற்றும் தந்தை ரவி இருவரும் சமாதானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இதனை மகேஸ்வரியின் தாய் சாந்தி மற்றும் தந்தை ரவி ஆகிய இருவரும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதாபன் தனது மாமனார் மற்றும் மாமியார் இருவரையும் கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதாபனை கைது செய்துள்ளனர்.
