தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அண்ணாநகர் குளத்தில் மூழ்கி பலியான முதியவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கீதாஜீவன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியிலுள்ள குளத்தினை சலவைத்தொழிலாளர்கள் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதி தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் சலவை செய்வதற்கான பகுதியாக மாற்றி அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று அண்ணாநகரை சேர்ந்த சலவைத்தொழிலாளி கருத்தப்பாண்டி இந்த குளத்தில் மூழ்கி பலியானார். மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிர் இழந்த முதியவர் குடும்பத்தினர் நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., நேரில்சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் ஜஸ்டின் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.