கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64, சீனிவாசா நகர் சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடம், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் நவீன அங்காடி கட்டிடம், வார்டு-68, ஜவஹர் நகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சிக் கூடம், வார்டு-70, ரமணா நகர், கவுதமபுரத்தில் மாநகராட்சி சார்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் ஆகியவற்றின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதை தொடர்ந்து, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-71க்குட்பட்ட புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஆடுதொட்டி அருகில் மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவினைப் பயன்பாட்டிற்குத் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

இந்த விளையாட்டுப் பூங்காவில் சிறுவர்களுக்கான சாய்தள சறுக்கு விளையாட்டு, ஏற்ற விளையாட்டு, ஊஞ்சல், குடை ராட்டினம் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  பின்னர், ராயபுரம் மண்டலம், வார்டு-58, ராட்லர் தெருவில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 595 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதில் உட்புற மற்றும் வெளிப்புற பயிற்சிக்கான கட்டமைப்புகள், பாதுகாவலர் அறை, அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வின்போது, மேயர் பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி, வட்டார துணை ஆணையாளர்கள்கவுசிக், கட்டா ரவி தேஜா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிஎம்டிஏ) இந்துமதி, கண்காணிப்புப் பொறியாளர் ராஜன் பாபு, நியமனக் குழு உறுப்பினர் சொ.வெலு, மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், ராஜேஸ்வரி ஸ்ரீதர், மண்டல அலுவலர்கள் சொக்கலிங்கம், சி.விஜயபாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: