திருவாரூர்,மார்ச் 4: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்ற அரசு பேருந்து கண்டக்டர் பலியானார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரி கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (46). அரசு பேருந்து கண்டக்டரான இவர் நேற்று முன்தினம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரமேஷுக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே ரமேஷ் இறந்தார். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
