ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க ஒன்றிய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை

சென்னை: ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் முயல்வது கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: ஈரான் மீது போர் தொடுத்து உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிப்பதற்கு இந்திய அரசு தயங்குகிறது. இதனால் மேற்காசிய நாடுகளில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாத ஒன்றிய மோடி அரசு, இந்தியாவில் நடைபெறும் ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்குமாறும், போராடும் அமைப்புகள் மற்றும் குரல் கொடுக்கும் தனிநபர்களை கண்காணிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை முடக்கும் நோக்கம் கொண்டது.

இந்தியா எப்போதுமே உலக சமாதானத்தை, அமைதியை விரும்புகின்ற நாடாகும். அணிசேரா நாடாகும். பிரதமர் மோடி பதவிக்கு வந்தது முதல், நமது வெளியுறவுக் கொள்கையில் பிற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் ஆதரவு நிலையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. ஈரான் ஆதரவு போராட்டங்களையும் முடக்கிவிட முனைகிறது. எனவே, இந்திய மக்கள் போருக்கு எதிரான இயல்பான மனநிலையுடன் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்க இஸ்ரேலிய அரசுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டங்களை முடக்க நினைப்பது எதேச்சதிகார நடவடிக்கையாகும். ஜனநாயக விரோத இத்தகையப் போக்கை உடனடியாக ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: