பிரதமர் மோடி உருவபொம்மையை தொங்கவிட்ட காங். தலைவர் கைது: ராகுல் உருவபொம்மையை பாஜவினர் தொங்க விட்டதால் பரபரப்பு

நாகர்கோவில்: பிரதமர் மோடி உருவபொம்மையை தொங்கவிட்ட காங். தலைவர் கைது செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக ராகுல்காந்தி உருவபொம்மையை பாஜவினர் தொங்க விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டதி பள்ளி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கிருந்த மரத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலருமான நவீன் குமார் தலைமையில் காங்கிரசார் பிரதமர் மோடி உருவ பொம்மையை கட்டி தொங்க விட்டனர். கோட்டார் போலீசார் வந்து உருவபொம்மையை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் நவீன்குமார் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் நவீன்குமாரை நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ தலைமையில் பாஜவினர் கோட்டார் காவல் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். இதற்கிடையே காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று மதியம் வடசேரி சந்திப்பில், ராகுல்காந்தி உருவபொம்மையை தொங்க விட்டு பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

Related Stories: