பள்ளிபாளையம், பிப். 27: பள்ளிபாளையம் நகராட்சி நான்குரோடு சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்தினை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிபாளையம் நகராட்சி நான்குரோடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு செல்லும் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் மட்டும் மேம்பாலத்தில் கடந்து செல்கின்றன. சங்ககிரி, குமாரபாளையத்திலிருந்து வரும் வாகனங்கள், பஸ்கள், கார்கள், டூவீலர்கள் அனைத்தும் தரைவழியாக நான்கு ரோட்டை கடந்து செல்கின்றன. சாலை சந்திப்பில் வரும் கார்கள், பஸ்கள், டூவீலர்கள் அனைத்தும் வேகத்தோடு வந்து விபத்தினை ஏற்படுத்துகின்றன. சாலை சந்திப்பை கடக்க நிறுத்தி அனுப்பும் சிக்கனல்கள் இல்லாததால், சந்திப்பை கடப்பதில் வாகன ஓட்டிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டு விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, நான்கு ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். மேலும், வாகனங்களின் வேகத்தை குறைக்க, சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
