மல்லசமுத்திரம், பிப்.26: மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப்பாதை திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே வையப்பமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம் மற்றும் கார்த்திகை தீப திருவிழாவின்போது நடைபெறும் சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். படிக்கட்டு ஏறிச்சென்று வழிபட்டு வந்த நிலையில், கோயிலுக்கு எளிதாக செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
கோயில் வாசல் வரை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்ல வசதியாக மலைப்பாதையை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்எம்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவரது தீவிர முயற்சியால் ரூ.4.56 கோடியில் மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் கோயில் மலைப்பாதை திறப்பு விழா வரும் 1ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் புதிய தார்சாலை பக்தர்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் ஆன்மிக நண்பர்கள் செய்துள்ளனர்.
