ஈரான் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி மறைவு: SDPI கட்சி இரங்கல்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனிக்கு SDPI மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி நடத்திய கொடூரமான, ஆணவம் நிறைந்த தாக்குதல்களில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா அலி கொமேனி வீரமரணம் அடைந்துள்ளார். இந்த மிகப்பெரிய இழப்பிற்கு SDPI கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் ஈரான் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கை, ஒரு மதிப்பிற்குரிய ஆன்மீகத் தலைவரின் உயிரைப் பறித்தது மட்டுமின்றி, சிவிலியன் உள்கட்டமைப்புகளை அழித்து, அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கி, ஈரான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய ஆணவம் நிறைந்த தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களையும், ஐ.நா. விதிமுறைகளையும் மீறுவதோடு, பிராந்திய அமைதியை ஆபத்தில் ஆழ்த்தி, உலக அளவில் அபாயகரமான நிலைமையை உருவாக்கியுள்ளன. இந்த பகைமை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், இதற்குப் பொறுப்பானவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தவும், ஈரானின் இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் உலக நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென SDPI கட்சி வலியுறுத்துகிறது.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் SDPI கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஈரான் மக்களின் துன்பத்திலும் பங்குகொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: