சென்னை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று எழுதிய கடிதம்: வளைகுடா பகுதியில் போர் சூழ்ந்துள்ளது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அதிகரிப்பு, விமானப் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் பதற்ற நிலை, அங்கு வாழ்ந்து வேலை செய்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும், அதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்தவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
மேலும், சில பகுதிகளில் குண்டு சத்தங்கள் கேட்கப்பட்டதுடன், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் உடனடி மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய தூதரகங்களிலும் அவசர ஒத்துழைப்பு மையங்களை அமைத்தல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நேரடி அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல், இந்திய தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட உதவி எண்களை செயல்படுத்தி, விரைவான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு விரைவாக செயல்படும் என நம்புகிறேன்.
