சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யாவா காரணம்..? எல்லாருக்கும் வாங்கி கொடுக்கும் உத்தமரு அவரு தான்…!

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் மோடி ஜி அனுப்பி இங்கு வந்துள்ளார். அவர் வந்தவுடன் பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தை எழுப்பி பிரித்து எடுத்துவிட்டனர். அனைத்து கட்சியிலும் இதுபோன்ற கோஷத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடையாளம் தெரியும். இந்த தேர்தலுக்குள் புதிதாக ஒன்றை கண்டுபிடிப்போம். ஒவ்வொரு பூத்திலும் எச்சரிக்கையாக இருங்கள். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. திமுக எங்கு பார்த்தாலும் சிலிண்டர் கிடைக்கவில்லை என போராடி வருகின்றனர். சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யாவா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளைத்தான் கேட்க வேண்டும். உலக நாடுகள் அடித்துக் கொள்கிறார்கள். சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இன்று புத்திசாலித்தனமாக ஜனநாயக முறைப்படி அறிவோடு அத்தனை வெளிநாடுகளிடம் பேசி எல்பிஜி சிலிண்டர்களை அமைதியாக கொண்டு வந்து சேர்த்த உத்தமர் நரேந்திர மோடி ஜி. நரேந்திர மோடி சாணக்கியத்தனத்தினால் பெட்ரோல், டீசல், காஸ் எதுவும் பிரச்சனை இன்றி கிடைத்து வருகிறது. அதிமுக-பாஜ கூட்டணி மூழ்குகின்ற கப்பல் என முதலமைச்சர் கூறுகிறார். எந்த கப்பல் மூழ்கினாலும் அதனை வெளியே எடுத்து வருகின்ற நீர்மூழ்கி கப்பல் அதிமுக. இவ்வாறு பேசினார்.

என்ன பண்ணாலும் உனக்கு சீட் இல்ல..!
ஆர்ப்பாட்டத்தின் இடையே திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக, பாஜ நிர்வாகிகளின் பெயரை ஒரு பேப்பரை பார்த்தபடி வாசித்தார். அப்போது ஒரு பாஜ பிரமுகரின் பொறுப்பு, பெயரை விட்டு விட்டதாக நிர்வாகிகள் கூறினர். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘இல்ல, அத்தனை பெயரையும் படித்து விட்டேன்’ என்றார். ஆனாலும் நிர்வாகிகள், ‘இல்லை, அவரது பெயரை விட்டு விட்டீர்கள்’ எனக்கூறி அவரது பொறுப்பு, பெயர் விபரம் பற்றி கூறினர். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், அந்த பாஜ பிரமுகரின் பொறுப்பு, பெயரை சொல்லி விட்டு, ‘நீ என்ன பண்ணாலும் உனக்கு சீட் கிடையாது, பாத்துக்கலாம், பாத்துக்கலாம், நீ தைரியமா இரு, பயப்படாதே’ என கலாய்த்து கூற அங்கிருந்த அதிமுகவினர் சிரித்து விட்டனர். மாறாக இது அந்த பாஜ பிரமுகரின் தரப்பினருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

Related Stories: