நீடாமங்கலம், பிப். 28: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாணவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
மாணவர்களது அறிவியல் படைப்புகள் ஆக்கப்பூர்வமாகவும், இயற்பியல், வேதியல் உயிரியல் நிகழ்வுகளோடு, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பது பாராட்டுக்குரியது என்று பாராட்டினர். மாணவர்களின் படைப்புகளுக்கு வரும் 18.3.26ல் நடைபெறும் பள்ளி ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்று தலைமை ஆசிரியர் தேவி லட்சுமி தெரிவித்தார். நிகழ்வின் முன்னதாக ஆசிரியர் சிங்கார கஸ்தூரிபாய வரவேற்றார். ஆசிரியர் கல்பனா நன்றி கூறினார்.
