தஞ்சாவூர், பிப்.28: சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது; தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை சொல்ல சென்றால் அவரின் அணுகுமுறை சரியான அணுகுமுறை இல்லாமல் உள்ளது.
அது மட்டுமில்லாமல், என்னை பார்ப்பது என்றால் அப்பாய்ண்மெண்டு வாங்கி வர வேண்டும் என்று கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் அலட்சியப்போக்குடன் அவர் அணுகி வருகிறார். உடன் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மீது தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையிலும் நல்லதொரு அணுகுமுறை இல்லாத நிலையிலும் உள்ள உதவி செயற்பொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணியிட மாறுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
