தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நல உதவி வழங்கி கொண்டாட வேண்டும்

தூத்துக்குடி, பிப். 28: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுமென நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து தற்போது வரை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் திமுக தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. கழக உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் அனைவரும் வியக்கும் வகையில் உயர்த்தியிருக்கிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், உலகத்திற்கே முன்மாதிரியாக விளங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக இலவச மடிக்கணினி, அன்புக் கரங்கள் திட்டம், தாயுமானவர் திட்டம், அன்புச்சோலை, பணிபுரியும் மகளிர் நலனுக்காக தோழி விடுதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிக் கடன், கலைஞரின் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 என எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், இளைய தலைமுறையின் வளமான எதிர்காலத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார். எதிர்க்கட்சியினரும் பாராட்டும் வகையில் திராவிட மாடல் பொற்கால ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்த நாள் நாளை (மார்ச் 1ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை அமைப்புகள் தோறும் கழக கொள்கை பாடல்களை ஒலிபரப்பியும், ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைகள் தோறும் திமுக கொடிகளை புதுப்பிப்பது, புதிய கொடிகளை ஏற்றி வைப்பது, அண்ணா, கலைஞர் பெயரில் அமைந்துள்ள படிப்பகங்களுக்கு பயனுள்ள புதிய புத்தகங்களை வழங்குவது, திமுக முன்னோடிகளுக்கு சிறப்பு செய்வது என கட்சி வளர்ச்சிக்காகவும், சமுதாயத்தில் நலிந்த ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது என தலைவரின் பிறந்த நாளை அவரவரால் இயன்ற நற்பணிகளை செய்து மக்கள் பயனுறும் வகையிலும் கொண்டாட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: