புதுச்சேரி, பிப். 28: புதுச்சேரி காவல்துறையில் சைபர் கிரைம் சீனியர் எஸ்பியாக பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரியான இஷா சிங் கடந்த மாதம் டெல்லிக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, புதுச்சேரி காவல் பணியில் இருந்து அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரிகளான ராகவ் சைபர் கிரைம் சீனியர் எஸ்பியாகவும், திவ்யா போக்குவரத்து சீனியர் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனால், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இலாகா மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்: சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணனுக்கு கடலோர பாதுகாப்பு, ரவுடி தடுப்பு படை, போதை தடுப்பு பிரிவு, புதிய குற்றவியல் சட்டம், மாவட்ட அளவிலான ஆலோசனை குழு ஆகிய துறைகளும், சைபர் கிரைம் சீனியர் எஸ்பி ராகவ்-க்கு ஐஆர்பிஎன், ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, அனைத்து போர்ட்டல்கள், கிரைம் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க்கிங் அமைப்பு, போலீஸ் இணையதளம் மற்றும் சமூக வலைதளம், வெளியீடுகள், புகார் மேலாண்மை அமைப்பு ஆகிய துறைகளும், போக்குவரத்து சீனியர் எஸ்பி திவ்யாவுக்கு போலீசிங் ஆப் போலீஸ், பிசிஆர் பிரிவு, ஒயர்லெஸ், போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஆகிய துறைகளும், குற்றம் மற்றும் குற்றப்புலனாய்வு சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணனுக்கு சிபிசிஐடி, சிறப்பு பிரிவு, அயலக பதிவேடு துறை, குற்றப்பதிவேடுகள் பிரிவு, சிக்மா செக்யூரிட்டி, தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு, போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை தடயவியல் பிரிவு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை காவல் தலைமையக சீனியர் எஸ்பி ஏகே.லால் நேற்று வெளியிட்டுள்ளார்.
