×

பலாத்கார சிறுமிகளின் பெயரை யூடியூபில் வெளியிட்ட கேரள முன்னாள் பெண் டிஜிபி மீது போக்சோ வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளின் பெயர், விவரங்களை யூடியூபில் வெளியிட்ட பாஜ கவுன்சிலரும், முன்னாள் டிஜிபியுமான ஸ்ரீலேகா மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கேரளாவின் முதல் பெண் டிஜிபி ஸ்ரீலேகா. கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் வார்டில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஸ்ரீலேகா சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுமிகள், அவரது குடும்பத்தினரின் பெயர், விவரங்களை அவர் தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், அவரது குடும்பத்தினரின் பெயர், விவரங்களை வெளியிட்ட ஸ்ரீலேகா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலரான ஜெயச்சந்திரன் திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். சட்டம் குறித்து நன்றாகத் தெரிந்த ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர், விவரங்களை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து ஸ்ரீலேகா மீது மியூசியம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* போக்சோ வழக்கு பதிவு செய்ய முடியாது ஸ்ரீலேகா பேட்டி
இது குறித்து ஸ்ரீலேகா கூறியது: பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 2 பேர் குறித்து நான் என்னுடைய யூடியூப் மூலம் தெரிவித்திருந்தேன். அவர்கள் 2 பேருமே இறந்து விட்டனர். 18 வயதை கடந்த பின்னர் தான் ஒருவர் இறந்தார். அவரது பெயரை நான் எந்த இடத்திலுமே குறிப்பிடவில்லை.எனவே என் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : POCSO ,Kerala ,DGP ,YouTube ,Thiruvananthapuram ,BJP ,Srilekha ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...