×

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி நியமனம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கூடியிருந்த நிலையில், அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய சட்டத்துறை மற்றும் குடியசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று தெரியவருகிறது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் வஸ்தவா வரும் மார்ச் 5ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். எனவே மார்ச் 6ம் தேதி முதல் தர்மாதிகாரி பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது. இதேப்போன்று அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி லிசா கில், ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக முகமது நதீம் செராஜ் உட்பட ஒன்பது வழக்கறிஞர்களை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

* யார் இந்த எஸ்.ஏ.தர்மாதிகாரி?
சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966ம் ஆண்டு ராய்பூரில் பிறந்தவர். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். 1992ம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒய்.எஸ். தர்மாதிகாரிக்கு ஜூனியராக பணியாற்றினார். மேலும் 2000 முதல் 2015 வரை அரசின் நிலை ஆலோசகராக, வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, ஒன்றிய கலால் வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், பிஎஸ்என்எல், போபால் எரிவாயு உள்ளிட்ட வழக்குகளில் பணியாற்றினார்.

மேலும் ஜபல்பூரில் உள்ள மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் தர்மாதிகாரி 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2016ல் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மார்ச் 17, 2018 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் கேரளா ஸ்டோரி 2 படம் குறித்த வழக்கை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விசாரித்து இவர் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : S.A. Dharmadhikari ,Madras High Court ,Supreme Court Collegium ,New Delhi ,Union Government ,Chief Justice ,Supreme Court ,Surya Kant ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...