×

சபரிமலை கொடிமரத்திற்கு தங்கம் பெறப்பட்டதில் மோசடி நடிகர்கள் மோகன்லால், திலீப்பிடம் போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலையில் புதிய கொடி மரத்திற்கு நன்கொடையாக தங்கம் பெறப்பட்டதில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் திலீப்பிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். சபரிமலையில் கடந்த 2017ம் ஆண்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதற்காக பிரபல நடிகர்கள் மோகன்லால், திலீப், ஒன்றிய இணையமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி, சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார், டைரக்டர் ரெஞ்சி பணிக்கர் உள்பட 27 பேரிடம் இருந்து நன்கொடையாக தங்கம் பெறப்பட்டது. இவ்வாறு தங்கம் பெறப்பட்டதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நன்கொடையாக தங்கம் வழங்கிய அனைவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஒன்றிய இணையமைச்சரும்,நடிகருமான சுரேஷ் கோபி, தயாரிப்பாளர் சுரேஷ்குமார் டைரக்டர் ரெஞ்சி பணிக்கர் உள்பட சிலரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் பிரபல நடிகர்கள் மோகன்லால் மற்றும் திலீப் ஆகியோரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. கொடி மரத்திற்கு தங்கம் கொடுக்க வேண்டும் என்று நண்பரும், அமைச்சருமான சுரேஷ் கோபி கூறியதாகவும் அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நகைக்கடையிலிருந்து 2 பவுன் தங்கம் வாங்கி ஒரு நண்பர் மூலம் சபரிமலைக்கு கொடுத்து விட்டதாகவும் மோகன்லால் போலீசிடம் கூறினார்.

Tags : Mohanlal ,Dileep ,Sabarimala ,Thiruvananthapuram ,Anti-Corruption Bureau ,
× RELATED காங்கிரஸ் நிர்வாகிகள் கைது விவகாரம்;...