நாமக்கல், பிப்.19: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பணியில் சேர்ந்துள்ள 1,700 முதுகலை ஆசிரியர்களுக்கு, வரும் 23 முதல் 28ம் தேதி வரை ஒவ்வொரு பாடத்திற்கும் 3 நாட்கள் என கற்றல், கற்பித்தல் பயிற்சி மற்றும் அடிப்படை நிர்வாக பயிற்சிகள் பாட வாரியாக சென்னை, வேலூர், சேலம், கன்னியாகுமரி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி ஒவ்வொரு பாடத்திற்கும் 4 நாட்கள் நடைபெறுவதால், இதில் முதுகலை ஆசிரியர்கள் அவசியம் 100 சதவீதம் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பது சரியானது தான். ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 12 நாட்களே உள்ள நிலையில், புதிதாக பணியில் சேர்ந்த ஆயிரக்கணக்கான முதுகலை ஆசிரியர்கள், அடுத்து வரக்கூடிய இந்த 13 நாட்களிலும், தங்களிடம் படிக்கும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும், அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கும் உரிய பயிற்சியை அளிக்க முக்கியமான நாட்களாக உள்ளன. எனவே, வரக்கூடிய 13 நாட்களிலும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளை அவர்கள் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்த பயிற்சியை தேர்வுகள் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
