* திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக சூளுரைப்போம்
* முதன்மை செயலாளர் கே.என்.நேரு அழைப்பு
சென்னை: திருச்சியில் வரும் 9ம் தேதி 10 லட்சம் பேர் பங்கேற்கும் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்- நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடக்கிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக சூளுரைப்போம் என்று முதன்மை செயலாளர் கே.என்.நேரு அழைப்பு விடுத்துள்ளார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து மிகப் பிரமாண்டமாக நடத்திட தயாராகிக் கொண்டிருக்கிறோம். திருச்சியின் மாநாடு திருப்புமுனை மாநாடு என்பதை விட திக்கெட்டும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக நடத்திட வேண்டும். திருச்சியில் திரளும் கூட்டம் 2026 சட்டப்பேரைவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாய் அமந்திட வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு , என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவாடி , வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைகள், கழக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள்-உறுப்பினர்கள் பயிற்சிக் கூட்டம், வெல்லும் தமிழ்ப்பெண்கள் மகளிரணி மாநாடுகள், வீடு வீடாகப் பரப்புரை என அசுர வேகத்தில் நம் கழகம் களப்பணியாற்றி வந்தாலும் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மெயின் பிக்சராக ஆக அமைய உள்ளது.
இந்த மாபெரும் மாநில மாநாட்டில் அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர,நகர-ஒன்றிய-பகுதி- பேரூர், வார்டு – கிளைக் கழக செயலாளர்கள் – நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் மாநில மாவட்ட, மாநகர-நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் , தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள் என திமுகவின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள், அமைப்பாளர்களும் தங்கள் அணி சார்பில் அனைவரும் முழுமையாக கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இம்மாபெரும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடும் வகையில் அனைத்து திமுக மாவட்ட செயலாளார்களும் அந்தந்த மாவட்ட ஒன்றிய நகர – பேரூர் அளவில் நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி திருச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை , வாகன வசதிகள் , செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திட வேண்டும் எனவும், வாகன நிறுத்தும் வசதி, போக்குவரத்து வழித்தட ஏற்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட வசதியாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து கிளம்பும் வாகன விவரங்களை மார்ச் 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோல ஒரு திமுக நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் கலந்து கொள்வதையும், திமுக தலைவர் உரையை முடிக்கும் வரையில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கும் வழிகாட்டி, மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுவதையும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் மாநாடு நோக்கி கிளம்பிய பிறகு தான் மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு கிளம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கரை புரண்டு ஓடும் காவிரியாய் தடைபோட முடியாத கடல் அலையாய் திருச்சியில் திரள்வோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக சூளுரைப்போம். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
