ஒடுகத்தூர், பிப்.9: அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த ஓராஜாபாளையம் கிராமத்தில் குட்டை நீரோடைக்கு இடம் உள்ளது. இது ஒடுகத்தூர் வருவாய் துறைக்கு சொந்தமான இடமாகும். இதனை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(42) என்பவர் பாதுகாத்து வந்தார். மேலும், இந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த சில தனி நபர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து அவர் வேப்பங்குப்பம் காவல் நிலையம் மற்றும் ஒடுகத்தூர் விஏஓ சரளா ஆகியோரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் விஏஓ சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு கட்டிவரும் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு கூறினர்.