புறநகர் மின்சார ரயில் ரத்து தெற்கு ரயில்வேயின் அலட்சியம் கேட்காமலேயே அரசு பேருந்து சேவை இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: புறநகர் மின்சார ரயில் ரத்து தெற்கு ரயில்வேயின் அலட்சியம், கேட்காமலேயே அரசு பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகள் தெற்கு ரயில்வே மூலம் சீரமைக்கும் பணி கடந்த 20ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட இருப்பதாக முந்தைய நாளான கடந்த 19ம் தேதி திடீரென அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பு தெற்கு ரயில்வேயிடமிருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெற்கு ரயில்வேயை தொடர்பு கொண்ட பின்னரே மின்னஞ்சல் மூலம் விவரங்கள் பெறப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பில் கூட்ட நெரிசல் நேரங்களில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில் சேவை என்பது 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்ற நேர அட்டவணை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடைமுறையில் 30 நிமிட இடைவெளியில் மட்டுமே புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த குறைக்கப்பட்ட நேர அட்டவணை கடந்த 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பருவத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் எவ்வித ஆலோசனையும் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கருத்தில் கொள்ளாமல் எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளினால் மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்விற்கான பயிற்சி மேற்கொள்ளவும், தேர்வினை உரிய நேரத்தில் எழுதுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.

இருப்பினும், சென்னை மாநகரின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்வதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் ஏற்கனவே தடத்தில் இயக்கப்பட்டு வரும் 314 சேவைகளுடன் கூடுதலாக 60 சிறப்பு பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மேலும் இந்த கூடுதல் இணைப்பு பேருந்து சேவைகளின் மூலம், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தலைமைச்செயலகம், எழிலகம், சென்ட்ரல், அரசு பொதுமருத்துவமனை, உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதலிய இடங்களுக்கு பயணிகள் தங்களது வேலை நிமித்தமாக பயணத்தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக திட்டமிட்டு இயக்கப்படுகிறது.

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து பாதிப்பை கடந்த 20ம் தேதி அன்றே மாநில அரசு கணித்து கூடுதல் பேருந்துகளை மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு ஓரளவு நிலைமை சீர் செய்யப்பட்டது. முன்னதாகவே தெற்கு ரயில்வே மூலம் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு உரிய தகவல் அளித்திருந்தால் மற்றும் உரிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு இருந்தால் பயணிகள் பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை கலந்தாலோசிக்கப்பட்டு எடுத்திருக்கலாம். புறநகர் ரயில் சேவைகள் இயக்கம் குறைக்கப்பட்ட தகவல் வெளியான உடன் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதன் பின்னர்தான் தெற்கு ரயில்வே விழித்துக்கொண்டு நேற்று முதல் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து புனித தோமையார் மலை மற்றும் எழும்பூர் வரை குறுகிய தூர இடங்களுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு புறநகர் மின்சார ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் இருந்து தேவையான அளவு மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவதால் ஒரே இடத்தில் பயணிகள் கூடி சிரமம் ஏற்படாத வண்ணம் உடனுக்குடன் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரித்த நேரத்தில் செல்கின்றனர். புறநகர் ரயில் பயணிகள் 3 மாத காலத்திற்கான மாதாந்திர பயண அட்டை பெற்றுள்ளதால் கூடுதல் பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு கட்டணம் செலுத்தி தங்களது இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. முதல்வர் தொடர்ந்து இதுகுறித்து விவரங்கள் கேட்டறிந்து வருகிறார். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பயணிக்க ஏற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: