தர்மபுரி, பிப்.25: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 27ம்தேதி நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே துறையில் குரூப்-டி(ஆர்ஆர்பி.,) தேர்வுற்கான 22,195 காலிப்பணியிடங்கள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 2ம்தேதி ஆகும். எனவே, இந்த போட்டி தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு மற்றும் இலவச மாதிரி தேர்வு, அனுபவம் மிக்க சிறந்த பயிற்றுநர்களை கொண்டு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 27ம்தேதி அன்று தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அலுவலகத்தில் பள்ளி பாடபுத்தகங்கள் உள்பட 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, படிப்பக வசதி, இலவச ஒய்பை மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான, அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://rb.gy/xxudem இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
