இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சி அடங்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் சிறையில் உள்ள இம்ரானை விடுவிக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அதன் பின் கடந்த 18ம் தேதி போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதில், பேசிய கைபர் பக்துன்வா மாகாண முதல்வரும் இம்ரானின் பிடிஐ கட்சி மூத்த தலைவருமான சோஹைல் அப்ரிடி, நீதிமன்ற உத்தரவுகள் குப்பை தொட்டியில் வீசப்படுகின்றன. பிடிஐ தலைவரை அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சிறையில் உள்ள பிடிஐ நிறுவனர் இம்ரான் கானால் தெரு இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவரின் விடுதலைக்காக இம்ரான் கான் விடுதலை படை உருவாக்கப்படும். இந்த படை அமைதியான போராட்டம் நடத்தும். ரம்ஜானுக்கு பிறகு படை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுப்பார்கள் என்றார். சோஹைல் அப்ரிடியின் இந்த பேச்சு பற்றி அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் காஜா ஆசிப் கூறுகையில், பெடரல் அரசைத் தவிர, வேறு யாருக்கும் எந்தப் படையையும் உருவாக்க உரிமை இல்லை. சோஹைல் அப்ரிடியின் இந்த பேச்சு அரசியலமைப்பிற்கு விரோதமானது, சட்டவிரோதமானது. இதனால் அவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கருதுகிறேன் என்றார்.
