பாங்காக்: மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் டி20 அரையிறுதிப் போட்டியில் நேற்று, இந்தியா ஏ – இலங்கை ஏ மகளிர் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணியின் துவக்க வீராங்கனை ஹன்சிமா கருணாரத்னே 14 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீராங்கனை சஞ்சனா கவிந்தி 31 ரன் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், இலங்கை 19.5 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய இந்திய துவக்க வீராங்கனைகள் நந்தினி காஷ்யப் 13, தினேஷ் விருந்தா 20 பந்துகளில் 42 ரன் எடுத்தனர். மற்ற வீராங்கனைகளும் அதிரடி காட்டியதால் 13.3 ஓவரில் இந்தியா 5 விக்கெட் மட்டுமே இழந்து 119 ரன் விளாசி அபார வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் வங்கதேச மகளிர் ஏ- பாகிஸ்தான் மகளிர் ஏ அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேச அணியின் துவக்க வீராங்கனைகள் இஷ்மா தாஞ்சிம் 12, ஷமிமா சுல்தானா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்தோரில் கேப்டன் ஃபாஹிமா காடுன் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 40 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் வங்கதேசம் ஏ அணி 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. அதன் பின், 111 ரன் இலக்குடன் களமிறங்கிய பாக். மகளிர் அணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 16.4 ஓவர் மட்டுமே ஆடிய பாக். மகளிர் 56 ரன்னுக்கு சுருண்டதால், 54 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது. அதையடுத்து, நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச மகளிர் மோதவுள்ளனர்.
