சென்னை: உலகக் கோப்பை டி20 லீக் தொடரில் கனடாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற கனடா பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆப்கன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 30 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த குல்பதீன் நயீப் 1 ரன்னில் வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு இப்ராகிம் ஜாட்ரன், செதிகுல்லா அடல் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 95 ரன் சேர்த்த நிலையில் அடல் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்ஸாய் 13 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் 33 ரன்னில் அரைசதம் அடித்த ஜாட்ரன் தொடர்ந்து அதிரடியாக ஆடி 56 பந்தில் 95 ரன்கள் (5 சிக்சர், 7 பவுண்டரி) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியால், ஆப்கன், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்தது. 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கனடா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 82 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய முகமது நபி 4 விக்கெட் கைப்பற்றினார்.
