துபாய்: துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டியில் நேற்று அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். துபாயில், துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா (31), டென்மார்க் வீராங்கனை (23) மோதினர். போட்டியின் துவக்கம் முதல் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை பெறுவதில் முனைப்பு காட்டினர். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜெஸிகா 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். 2வது செட் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் டாசன் வசம் சென்றது. அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் இரு வீராங்கனைகளும் துடிப்புடன் மோதினர். கடைசியில் அந்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜெஸிகா கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
* கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அல்காரஸ்
தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகள் கத்தாரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் வேலன்டின் ரோயர் மோதினர். முதல் செட்டில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அல்காரஸ், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ரோயர் ஈடுகொடுத்து ஆடியதால் சற்று இழுபறி காணப்பட்டது. இருப்பினும், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். அதன் மூலம் 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.
