சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: தாம்பரம் தொகுதியில் மாவட்ட மருத்துவமனை 115 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு, அதனை திறந்து வைத்து தாம்பரத்திற்கு பெருமை சேர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. நேற்றைய தினம் 180 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனையை ரூ.30 கோடி செலவில் நேற்று திறந்து வைத்த அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் தொகுதி மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த மாவட்ட மருத்துவமனை என்பது தாம்பரம் தொகுதி, பல்லாவரம் தொகுதி சுற்றுப்புற கிராமத்தில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2500 புற நோயாளிகளும், 250 உள்நோயாளிகளும் வந்து செல்கிறார்கள். இன்னும் போதுமான மருத்துவர்கள் தேவைப்படுகிறது. செவிலியர்கள் தேவைப்படுகிறது. கூடுதலாக எம்ஆர்ஐ ஸ்கேன் ஒன்று மிக மிக அவசரமாக தேவைப்படுகிறது. அமைச்சர் இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அந்தப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: வட்டார மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தினார். ரூ.115 கோடியில் ஒரு பிரமாண்ட கட்டிடத்தை முதல்வரே நேரில் வந்து திறந்து வைத்தார். மன்ற உறுப்பினர் இந்த மருத்துவமனைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி ஒன்று வேண்டும் என கேட்டிருக்கிறார். நிச்சயம் அதை அமைத்து தருவதற்கான முயற்சி எடுக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றி சொல்லியிருக்கிறார். அந்த மருத்துவமனையை பொறுத்தவரை ஒப்பளிக்கப்பட்டது என்னவோ அதற்குரிய மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கிறார்கள், ஒரு காலி பணியிடம் கூட இல்லை.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
