பல்லாவரம் பாலத்திற்கு மறைமலை அடிகளார் பெயர் வைக்க வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளார் இல்லம் புதுப்பிக்க வேண்டும். பல்லாவரம் பாலத்திற்கு மறைமலை அடிகளார் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் இ.கருணாநிதி எம்எல்ஏ நேற்று பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது: பல்லாவரம் தொகுதியில் தமிழறிஞர் மறைமலை அடிகளார் வாழ்ந்த இல்லம் இருக்கின்றது. 18 ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் அந்த இல்லத்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். தற்போது அந்த இல்லம் பாழடைந்து கிடைக்கின்றது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு விழா நடத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழறிஞர் மறைமலை அடிகளார் இல்லத்தை புதுப்பித்து தர வேண்டும். அதன் அருகில் இருக்கின்ற பெரிய பாலம், அதாவது பல்லாவரம் பாலம் இருக்கின்றது. அந்த பாலத்திற்கு அவரது பெயரையும் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘மறைமலை அடிகளார் இல்லம் பராமரிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். அது குறித்து துறை நடவடிக்கை எடுக்கும். மேம்பாலத்திற்கு பெயர் வைப்பது எங்கள் துறையினுடைய பணி அல்ல. அந்தத் துறையை சார்ந்த நெடுஞ்சாலைத்துறை அல்லது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலமாக அதற்கு பெயர் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Related Stories: