திருவனந்தபுரம்: கேரளாவில் அனைவருக்கும் பிறப்பிட அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். கேரள அரசு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும், திட்டங்களுக்கும் இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பிறப்பிட அடையாள அட்டை திட்டத்திற்கு கேரள அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அடையாள அட்டை பெறுவதற்கு கேரளாவில் பிறந்து வெளிநாட்டு குடியுரிமை பெறாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது தங்களுடைய மூதாதையர்களில் ஒருவர் கேரளாவில் பிறந்து வெளிநாட்டு குடியுரிமை பெறாதவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு பிறப்பிட அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது. இந்த அடையாள அட்டை கிடைத்த பின்னர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றால் அடையாள அட்டை ரத்து செய்யப்படும்.
