தேர்தலுக்கு பின் முதல்முறையாக துணை முதல்வர் ஷிண்டேவுடன் ராஜ்தாக்கரே சந்திப்பு

மும்பை: மும்பையில் சமீபத்தில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ – சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சி, உத்தவ் சிவசேனாவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் பாஜ – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. தேர்தலில் எம்என்எஸ் கட்சி வெறும் 5 இடங்களில் தான் வென்றது. 30 ஆண்டுகளாக பிளவுபடாத சிவசேனா வசம் இருந்த மும்பை மாநகராட்சி, பாஜ வசம் சென்றது உத்தவ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த தோல்விக்கு எம்என்எஸ் கட்சியும் ஒரு காரணம் என்பதால் தற்போது தாக்கரே சகோதரர்களுக்கு இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்தாக்கரே, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான நந்தன்வன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக எம்என்எஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இது அதிகாரப்பூர்வ சந்திப்பா அல்லது அரசியல் ரீதியிலான சந்திப்பா என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை.

Related Stories: