2021-22ம் கல்வியாண்டில், முதற்கட்டமாக கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மேல்நிலை பள்ளிகளாக தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டு, இப்போது சென்னையில் உள்ள மாநில தகைசால் பள்ளியுடன், 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல். அவற்றை அணுக தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமைத்திறன் பயிற்சி போன்றவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளில் 2,358 மாணவர்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் 50 விதமான துறைகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 41 மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகங்களில் பயின்று வருகின்றனர். மேலும், 17 மாணவர்கள் ஜப்பான், தைவான். மலேசியா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் முழு கல்வி உதவித்தொகைகளுடன் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3771 வகுப்பறைகள் திறப்பு
அரசு பள்ளிகளுக்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றை போதுமான அளவில் அமைத்து, கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ், 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 4 ஆண்கள் விடுதிகள் மற்றும் 4 பெண்கள் விடுதிகள் ரூ.673 கோடி செலவில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.2,009 கோடி மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
