சென்னை: தமிழ்நாட்டில் செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அவர், மாநில அரசுகளின் செலவினங்கள் ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3548 கோடி ரூபாய், ஜூல் ஜீவன் இயக்கத்திற்கு 3112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2246 கோடி ரூபாய் ஆகியவை ஒன்றிய அரசு இவ்வாறு நிறுத்தி வைத்துள்ளவற்றில் உள்ளடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான செலவினத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் 50 : 50 mன மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதன்படி மாநில அரசிற்கு கிடைக்கப் பெறவேண்டிய பலன்கள் இன்றளவும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான சுமார் 9,500 கோடி ரூபாய் மாநில அரசின் மொத்த நிலுவைக்கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது.
இதனால், மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்து காணப்படுவது மட்டுமல்லாமல், மாநிலத்திற்கு உரிய கடன் திரட்டும் திறனையும் பாதித்துள்ளது. இதனால் மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை செவிமடுத்து இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளத் தவறியுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
