பல்லேகெலே: ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் நேற்று, இலங்கை அணியிடம் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, போட்டியில் இருந்து வெளியேறியது. உலகக் கோப்பை டி20 தொடரின் 30வது போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. அதில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த இணை 8.3 ஓவரில் 104 ரன்கள் குவித்த நிலையில் டிராவிஸ் ஹெட் (29 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி, 56 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த கேமரூன் கிரீன் 3 ரன்னில் வீழ்ந்தார்.
அவரைத் தொடர்ந்து மார்ஷ் 54 ரன்னில் (27 பந்து, 2 சிக்சர், 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிம் டேவிட் 6 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவரில் ஆஸி, 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்திருந்தது. அதை தொடர்து களம் இறங்கிய இலங்கை அணி 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிப் பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் நிசாங்கா அதிரடியாக சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் டி20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.
