பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் செட்டிநாடு நிலக்கரி கிடங்கு உள்ளது. இந்த கம்பெனியிலிருந்து நிலக்கரி லாரி மூலம் சென்னை, திருவள்ளூர், ஆந்திரா, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சென்னையிலிருந்து கம்பெனிகளுக்கு பொருட்களை ஏற்றிவரும் லாரிகள் திரும்பிச் செல்லும்போது செட்டிநாடு நிலக்கரியை குறைந்த வாடகைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் உள்ளூர் லாரி உரிமையாளர்கள், பாதிக்கப்படுகின்றனர். இது சம்பந்தமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி சுற்றுவட்டார டிப்பர் லாரி மற்றும் டிரைய்லர் உரிமையாளர்கள் சங்கம்சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கம்பெனி நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.