திருவள்ளூர்: திருவள்ளுர் அடுத்த மேல்மணம்பேடு முன்னாள் ஊராட்சி தலைவரின் மைத்துனர் கொலை வழக்கில் சரணடைந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்டது மேல்மணம்பேடு ஊராட்சி. இப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கராஜ், அவரது தம்பி வெங்கட்ராமன் ஆகியோர் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்கனவே கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இருதினங்களுக்கு முன் மாலையில் தங்கராஜின் மைத்துனரான முருகேசன் மகன் கருணாகரன்(45) தனது வீட்டின் வெளியே நின்றிருந்தபோது அவ்வழியாக கார் மற்றும் பைக்குகளில் வந்த கும்பல், கருணாகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தயாராக இருந்த வாகனங்களில் தப்பினர்.