நடப்பு மாத சிறார் திரைப்படத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ‘அயலி பாகம்-1’ எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து அதன் 2-ம் பாகம் பள்ளிகளில் நடப்பு மாதம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை ஒருங்கிணைக்க பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் படத்தை பார்த்த பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு பட பின்னணியை விளக்க வேண்டும். இது சார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் 25 சிறந்த மாணவர்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

Related Stories: