வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் பணம் வரவு வீடுகளின் முன் கோலமிட்டு முதல்வருக்கு பெண்கள் நன்றி

சென்னை: வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் பணம் செலுத்தியதற்காக வீடுகளின் முன்பாக கோலமிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர். தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் பயனாளிகளான 1 கோடியே 31 லட்சம் பெண்கள் வங்கி கணக்கில் நேற்று முன்தினம் காலையில் திடீரென ரூ.5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், ‘இந்த பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல் அடுத்த 2 மாசம் அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமை தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக கோடைகால செலவுகளை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாசம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கேன்’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்து நேரில் நன்றி செலுத்தினர். பெண்கள் வரவேற்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திகைத்து போனார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று காலையில் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக கோலமிட்டு தங்களுடைய நன்றியை வெளிப்படுத்தினர். அந்த கோலத்தில் கலைஞர் உரிமை தொகை ரூ.5000 பெற்று கொண்டோம். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். மகளிர் உரிமை தொகை, கோடைக்கால சிறப்பு நிதி ரூ.5000 தந்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி\\” என்று வாசகம் இடம் பெற்றிருந்தது. ஒவ்வொருவரின் வீடுகளின் முன்பாகவும் இதுபோன்று கோலங்கள் போடப்பட்டிருந்தது. இன்னும் சில இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்து இருந்தனர். இது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

Related Stories: