அதே இடம்... அதே சட்டை... அதே பைக்... சென்டிமென்ட்டால் சிக்கிய செல்போன் திருடன்

பூந்தமல்லி: மதுரவாயல் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று முன்தினம் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து  மர்ம நபரை தேடினர்.

இந்நிலையில், அஷ்டலட்சுமி நகர் போலீஸ் பூத் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்தவரை மடக்கி விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில் இருந்த  அதே நபர், அதே சட்டையுடன், அதே பைக்கில் வந்திருப்பதும் தெரியவந்தது.

 விசாரணையில்  போரூரை சேர்ந்த மோகன்(32), சரியான வேலை கிடைக்காததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் 2 செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டும்  போலீசில் சிக்கவில்லை. அந்த சென்டிமென்ட் காரணமாக மீண்டும் அதே பகுதியில் அதே சட்டை அணிந்து அதே பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மோகனை கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

Related Stories: