சென்னை : இன்று (13.02.2026) டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டத்தில், ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை மற்றும் இரா.சுப்பிரமணியன், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது (13.02.2026) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 53.444 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணையிலிருந்து வினாடிக்கு 2,503 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது என்று தெரிவித்தார்.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு 2026, பிப்ரவரி முதல் மே மாதம் வரை வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீர் அளவான 10 டி.எம்.சி. நீரினை மாதத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் வீதம் உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.
