பாலக்காடு, பிப். 13: பாலக்காடு மாவட்டம் திருத்தாலா சட்டமன்ற தொகுதியில் சாலிச்சேரி அரசு ஆரம்பப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை உள்ளாட்சி மற்றும் கலால்துறை அமைச்சர் ராஜேஷ் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டு கால அளவில் கேரள கல்வித்துறையில் புதிய முன்னேற்றங்களை கொண்டு வர முடிந்தது. கேரள அரசு கல்வி இலாகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாணவர்களை நல்ல முன்னேற்ற பாதைகளில் வழி நடத்தி செல்ல முடிந்துள்ளது.
திருத்தாலா சட்டமன்ற தொகுதியில் 48 பள்ளிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சாலிச்சேரியில் அரசு ஆரம்பப்பள்ளியில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் 8 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சிக்கு சாலிச்சேரி கிராம பஞ்சாயத்து தலைவர் ரம்லா பீரான்குட்டி தலைமை தாங்கினார். திருத்தாலா பிளாக் பஞ்சாயத்து தலைவர் குஞ்சுன்னி முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். துணைத்தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
